மூவார், ஆக 25- தாங்கள் எதிர்நோக்கி வரும் திடீர் வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று சிம்பாங் ஜெராம் மக்கள்
குறிப்பாக, சுங்கை ஆபோங் அருகே வசித்து வருவோர் பெரிதும்
எதிர்பார்க்கின்றனர்.
முறையாக பராமரிக்கப்படாத வடிகால்கள் மற்றும் அப்பகுதி கண்டு வரும்
துரித வளர்ச்சி காரணமாக இங்கு வெள்ளப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக
சுங்கை ஆபோங் கிராமத் தலைவர் அபு பாக்கர் கஹார் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக ஏற்பட்டு வரும் இந்த தீடீர் வெள்ளம் இப்பகுதி
மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு முன்னர் இத்தகைய
பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டதில்லை என்று அவர் சொன்னார்.
இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் திடீர் வெள்ளம், வடிகால் மற்றும்
அடர்ந்த புதர்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என நாங்கள்
பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
மேலும், உள்ளுர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக அதிகமான
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட முயற்சிகளும்
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, சிம்பாங் ஜெராமில் குறிப்பாக பக்ரி பகுதியில் மேலும்
அதிகமான மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று
கம்போங் பத்து 2/3 கிராமத் தலைவர் அப்துல் ரஹிம் அகமது கூறினார்.
எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் வட்டார மக்களின் நலன் மற்றும்
சௌகர்யத்தை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார். போக்குவரத்து நெரிசல், தீடீர் வெள்ளம் ஆகியவற்றோடு அடிப்படை
வசதிகள் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இது தவிர, சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு ஏதுவாக பழுதடைந்த சாலைகள்,
சாலைகளில் காணப்படும் குழிகள் மற்றும் சாலை விளக்குள்
ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.


