கோலாலம்பூர், ஆக 14- கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி நேற்று
முன்தினம் வரை மாநிலத் தேர்தல் தொடர்பில் அரச மலேசிய போலீஸ்
படை 240 விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதோடு 15 பேரையும்
கைது செய்துள்ளது.
அக்காலக்கட்டத்தில் பெறப்பட்ட 1,951 புகார்களின் அடிப்படையில்
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
சிலாங்கூரில் 78 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட வேளையில்
அதற்கு அடுத்த நிலையில் பினாங்கு (42), கெடா மற்றும் திரங்கானு (34),
நெகிரி செம்பிலான் 25) மற்றும் கிளந்தான் (19) ஆகிய மாநிலங்கள்
உள்ளதாக அவர் சொன்னார்.
அதே சமயம் அக்காலக்கட்டத்தில் சிலாங்கூரில் 782 புகார்களும்
திரங்கானுவில் 390 புகார்களும் கெடாவில் 293 புகார்களும் கிளந்தானில் 265
புகார்களும் நெகிரி செம்பிலானில் 135 புகார்களும் பினாங்கில் 86
புகார்களும் பெறப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர இந்த புகார்களின் அடிப்படையில் கெடாவில் ஒன்பது பேர்,
பினாங்கு மற்றும் சிலாங்கூரில் தலா இருவர், நெகிரி செம்பிலானில்
ஒருவர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
தேர்தல் சமயத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்கு மொத்தம் 4,506
விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது. கெடாவில் 976 பெர்மிட்டுகளும்
சிலாங்கூரில் 933 பெர்மிட்டுகளும் கிளந்தானில் 882 பெர்மிட்டுகளும்
திரங்கானுவில் 768 பெர்மிட்டுகளும் நெகிரி செம்பிலானில் 495
பெர்மிட்டுகளும் பினாங்கில் 452 பெர்மிட்டுகளும் வழங்கப்பட்டன என்றார்
அவர்.
தேர்தல் தினத்தன்று நிகழ்ந்ததாக கூறப்படும் பல்வேறு குற்றங்கள்
தொடர்பில் 181 புகார்கள் பெறப்பட்ட வேளையில் இதன் தொடர்பில் 111
விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்


