ஷா ஆலம், பிப் 18- சிலாங்கூர் அரசின் அமைப்புச் சட்டம் மற்றும் நிரந்தர விதிகளைப் பின்பற்றியே பத்தாங் காலி தொகுதியை காலி செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் கூறினார்.
எந்த உறுப்பினரும் காரணமின்றி ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு வரத் தவறினால் அவரின் பதவியை பறிப்பதற்கு மாநில அமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளில் இடமிருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சபாநாயகர் (இங் சுயி லிம்) அமைப்புச் சட்டம் மற்றும் அவை நிரந்தர விதிகளை முழுமையாக ஆராய்ந்தப் பின்னரே சட்ட திட்டங்களுக்கேற்ப இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அவர் சொன்னார்.
சபாநாயகர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் அடிப்படையிலே இங் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஆறு மாத காலமாக சட்டமன்றக் கூட்டத்திற்கு வரத்தவறியற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் வழங்கவில்லை. உதாராணத்திற்கு உடல் நலக்குறைவு இருந்தால் மருத்துவ விடுப்பு சான்றிதழைக் காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் இருந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை கொடுத்திருக்கலாம் என்று அமிருடின் கூறினார்.
நாம் சட்டத்தை உருவாக்கும் இடத்தில் இருக்கிறோம். ஆகவே நமக்கு இடப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
பத்தாங் காலி உறுப்பினர் ஹருமாய்னி ஓமார் எந்த காரணமும் இன்றி ஆறு மாதங்களுக்கும் மேலாக சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பத்தாலி காலி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுவதாக இங் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


