கோம்பாக், நவ 14- மூத்த குடிமக்கள் மற்றும் நோய்த் தொற்று அபாயம் உள்ள தரப்பினரை உட்படுத்திய 5,000 பேருக்கு நியுமோகோக்கல் மற்றும் இன்புளுயென்ஸா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டம் மக்கள் நலனில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
எளிதில் நோய் பீடிப்புக்கு இலக்காகும் அபாயம் அதிகம் உள்ள மூத்த குடிமக்கள் நலனை மாநில அரசு ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்பதற்கு இந்த திட்டம் சிறந்த எடுத்துக் காட்டு என்று ஓய்வு பெற்ற இராணுவ வீரரான யூசுப் டின் (வயது 70) கூறினார்.
யூசுப் டின் (வயது 70)
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நானும் என் மனைவியும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோம். எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி திட்டம் மிகவும் பயன்மிக்கதாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அஹயா அல்முடின் ஜைனால் அட்னான் (வயது 65)
இதனிடையே, வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இத்தகைய இலவச தடுப்பூசித் திட்டம் பெரிதும் பயன்மிக்கதாக உள்ளதாக அஹயா அல்முடின் ஜைனால் அட்னான் (வயது 65) தெரிவித்தார்.
இலவசமாக வழங்கப்படும் காரணத்தால் நானும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொண்டேன். இந்த நோய் தடுப்பூசியை வெளியில் பெறுவதற்கு அதிக செலவு பிடிக்கும் என அவர் மேலும் சொன்னார்.
அகமது படோல் மாட் சோம் (வயது 65)
இந்த திட்டம் குறித்து கருத்துரைத்த அகமது படோல் மாட் சோம் (வயது 65) புற்று நோயாளியான தமக்கு இந்த தடுப்பூசி தமக்கு மிகவும் பயன்மிக்கதாக உள்ளது என குறிப்பிட்டார்.
மக்களின் சிரமத்தை மாநில அரசு உண்மையில் உணர்ந்துள்ளதை இந்த இலவச தடுப்பூசித் திட்டம் புலப்படுத்துகிறது என்று முன்னாள் லோரி ஓட்டுநரான அவர் கூறினார்.








