பெட்டாலிங் ஜெயா, அக் 14- விரைவில் நடைபெறவிருக்கும் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான கொள்கையறிக்கையை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வரும் அக்டோபர் 20ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடும்.
ஈப்போ, அனைத்துலக மாநாட்டு மையத்தில் அன்றைய தினம் நடைபெறவிருக்கும் ஹராப்பான் மாநாட்டையொட்டி இந்த தேர்தல் கொள்கையறிக்கையும் வெளியிடப்படுவதாக அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எங்கள் கொள்கையறிக்கை மிக நீண்டதாக இருப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. முடிந்த அளவு சுருக்கமாகத் தயாரிக்க முயற்சிக்கிறோம். ஆயினும், அந்த கொள்கையறிக்கை வாழ்க்கைச் செலவினம், கல்வி, சுகாதார வசதி, வேலை வாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கெஅடிலான் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் இவ்வாறு சொன்னார்.
பிரிபூமி பெர்சத்து மலேசிய (பெர்சத்து) கட்சியின் நிறுவனரும் அக்கட்சியின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் ராய்ஸ் ஹூசேன் முகமது அரிப் கெஅடிலான் கட்சியில் இணைவது தொடர்பான அறிவிப்பையும் அன்வார் இந்நிகழ்வில் வெளியிட்டார்.


