கோலாலம்பூர், ஆக 23- கடலோரப் போர்க்கப்பல் (எல்.சி.எஸ்.) கொள்முதல் தொடர்பான தடயவியல் தணிக்கை அறிக்கை இரகசியமற்ற ஆவணமாக வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவை அடுத்த கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என பி.ஏ.சி. எனப்படும் பொது கணக்காய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இத்திட்ட அமலாக்கம் தொடர்பான அனைத்து பரிமாற்றங்கள், நடவடிக்கைகள் மற்றும் பணி ஒப்பந்த கடிதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய எல்.சி.எஸ். மீதான தடயவியல் தணிக்கையை போஸ்டட் ஹெவி இண்டஸ்ட்ரிஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று பி.ஏ.சி. தலைவர் வோங் கா வோ அறிக்கை ஒன்றில் வலியுறுத்தினார்.
பெரும்பாலான பணி ஒப்பந்த கடிதங்களை போஸ்டட் நேவல் ஷிப்யார்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் 2015 ஆண்டு காலக்கட்டத்தில் வழங்கிய போதிலும் 2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் அமலாக்கம் கண்டதாக அவர் கூறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் பண பரிமாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அம்சங்கள் விடுபடுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.


