ஷா ஆலம், ஆகஸ்ட் 20: சமூக-பொருளாதார மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதிராவ், இதுவரை 200க்கும் மேற்பட்ட நபர்கள் RM10 லட்சம் செலவில் உதவித் திட்டங்களின் வழி பயனடைந்துள்ளனர் என்றார்.
“இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு விநியோகிக்கப்பட்டு விட்டது. எனவே அதிக தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக RM500,000 முதல் RM10 லட்சம் வரையிலான புதிய நிதிகளுக்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.
கடந்த ஆண்டு 260 தொழில்முனைவோருக்கு உதவ முடிந்தது. பலர் விண்ணப்பித்து உள்ளனர், தேவைப்படும் அனைவருக்கும் உதவ முடியும் என்று நம்புகிறேன்," என்றார்.
நேற்று 71 கோவில் பிரதிநிதிகளுக்கு RM670,000 மதிப்புள்ள ஒதுக்கீடுகளை வழங்கிய பின்னர் அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள் நடத்தும் தொழிலுக்கு ஏற்ப உபகரண உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஐ-சீட் திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தகுதித் தேவைகளில் சிலாங்கூர் குடிமக்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மாதத்திற்கு RM3,000 க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் மற்றும் வணிகத்தை இம் மாநிலத்தில் செயல்படுத்துபவர் களாக இருக்க வேண்டும்.
கூடுதலாக, வணிகம் சுறுசுறுப்பாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் அல்லது மனைவி (கணவன்/மனைவி) இதற்கு முன் சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டம் அல்லது சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் நிதித் திட்டத்தின் கீழ் உபகரண உதவியைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும்.


