கோலாலம்பூர், ஆக 17- மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தக துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 8,672 மருத்துவ அதிகாரிகளிடமிருந்து முதலில் கிடைக்க பெற்ற 4,053 நிரந்தர பணி நியமனம் விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளது.
நிரந்தரப் பணி நியமனம் பெற்றவர்களில் 3,215 மருத்துவ அதிகாரிகள், 438 பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் 400 மருந்தக அதிகாரிகளும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இவர்களில் 225 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த பணிக் கொள்கை கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் அதிக எண்ணிக்கையிலானோர் நிரந்தர பணிக்கு நியமனம் பெறுவது இதுவே முதன் முறையாகும். இதன் பின்னர் ஆண்டுக்கு 1,500 பேர் வீதம் நிரந்தரப் பணி நியமனத்தைப் பெறுவர் என்று அவர் சொன்னார்.
நிரந்தர பணி நியமன விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்ய முடியுமா என்பது குறித்து தீர்மானிக்க அமைச்சு பொதுச் சேவை ஆணையத்துடன் விவாதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிரந்தரப் பணி நியமனம் கிடைக்காத து தொடர்பில் பலர் அதிருப்தியடைந்துள்ளதை நான் உணர்ந்துள்ளேன். நிரந்தர பணி நியமனம் கிடைக்காதவர்களின் நிலை குறித்து மலேசிய மருத்துவ சங்கத்துடன் நான் விவாதிக்கவுள்ளேன்.
குறைந்த பட்சம், அவர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளும் நிபுணத்துவ மற்றும் பகுதி நிபுணத்துவ துறைகளில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.


