கோலாலம்பூர், ஜூலை 18 - ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கண்டறியப்படும் விளையாட்டாளர்கள் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) கருப்பு பட்டியலிடப்படுவார்கள் என்று மாநில சங்கங்களுக்கு மலேசிய பளுதூக்கும் சங்க சம்மேளனம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பேராக்கில் சுக்மா 2018 போட்டியில் நிகழ்ந்த சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் அச்சம்மேளனத்தின் தலைவர் டத்தோ அயூப் ரஹ்மாட் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு தேசிய பளுதூக்கும் அணி மேலாளர் அமிருல் ஹமிசான் இப்ராஹிம் கூறினார்.
அந்தப் போட்டியில் இரண்டு தடகள வீரர்கள் மெத்தில்ஹெக்ஸானமைன் வகை ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது.
எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னை மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில சங்கங்களுக்கு ஊக்கமருந்து பற்றிய விரிவுரைகளை வழங்கும் பணியில் மலேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்துடன் (அடமாஸ்) பளுதூக்கும் சங்க சம்மேளனம் ஒத்துழைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில் சுக்மா போட்டியின் போது அனைத்து ஊக்கமருந்து பிரச்சினைகளிலிருந்தும் பளு தூக்கும் விளையாட்டாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற தேசிய விளையாட்டு மன்றத்தின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மதிப்பிடப்படும். அதேசமயம், செப்டம்பர் 16 முதல் 24 வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெற உள்ள சுக்மா 20வது சுக்மா போட்டியை கம்போடியாவில் நடைபெறும் 2023 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இறுதி பயிற்சிக் களமாகவும் மலேசிய வீரர்கள் பயன்படுத்துவர் என்றார் அவர்.


