நீலாய், ஜூன் 7- தங்கள் பிள்ளைகளிடம் காணப்படும் மனோரீதியிலான மாற்றங்கள் மற்றும் விநோத போக்கினை மூடி மறைக்காமல் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை வழங்குவதற்கு முயற்சி எடுக்கும்படி பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மோசமான விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்கு இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சித்தி ஜைய்லா யூசுப் கூறினார்.
இவ்விஷயத்தில் குடும்ப உறுப்பினர்கள் முழு கடப்பாடு கொண்டுள்ளனர்.
உதாரணத்திற்கு, பிள்ளைகளின் நடவடிக்கையில் மாறுதல் (மனோரீதியான மாற்றங்கள்) தென்பட்டால் அது குறித்து அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அண்டை வீட்டாரும் கூச்சல் அல்லது தகராறு நடப்பதை உணர்ந்தால் உடனடியாக போலீஸ், சமூக இலாகா உள்ளிட்ட தரப்பினரின் கவனத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வினோத நிகழ்வுகளை உணர்ந்தால் தொலைபேசி வாயிலாக அல்லது குறுஞ்செய்தி மூலம் தகவல் தரலாம். பாதுகாப்பு விஷயத்தில் சமூகம் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என்றார் அவர்.
சிங்கப்பூரிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட பயன்படுத்தப்பட்ட தளவாடப் பொருள்களை மந்த்தினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தாரில் 68 வயதுடைய மூதாட்டியை அவரது மகனே கொலை செய்து உடலை 15 துண்டுகளாக வெட்டியச் சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு சொன்னார்.
42 வயதுடைய அந்த மூதாட்டியின் மகன் மனச் சிதைவு நோய்க்காக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். எனினும் அவர் தொடர் சிகிச்சையைப் பெறவில்லை என கூறப்படுகிறது.


