ஷா ஆலம், ஏப் 26- குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் “மேக்கார்“ எனப்படும் சிலாங்கூர் நகர்ப்புற சமூக பொருளாதார நகர்வு திட்டத்தை சிலாங்கூர் அரசு அமல்படுத்துகிறது.
இந்த முன்னோடித் திட்டம் தொடக்கமாக நான்கு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
சிஜங்காங், தாமான் டத்தோ ஹொர்மாட் அடுக்குமாடி குடியிருப்பு, பண்டமாரான், தாமான் ராஜா ஊடா மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு, கோத்தா கெமுனிங், ரீமாவ் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு, பத்து தீகா, பெர்பாடானான் பெங்குருசான் அங்கிரிக் 26 ஆகிய இடங்களில் இந்த திட்டம் அமலாக்கம் காணும் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சிறிய சாவடி அல்லது மினி மார்க்கெட் உருவாக்கப்படும். இங்கு பொருள்களை மலிவு விலையில் விற்பதன் மூலம் வட்டார மக்களின் பொருளாதாரச் சுமையை ஓரளவு குறைக்க இயலும் என்றார் அவர்.
அதே சமயம், பொது மக்களும் தங்கள் வசமுள்ள பொருள்களை அங்கு விற்க முடியும்.
அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உதவி நோக்கில் முதன் முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேவேளையில் குடியிருப்பாளர்களிடையே அணுக்கமான உறவையும் ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள இங்குள்ள பங்சாபுரி ரீமாவ் இண்டாவில் மேக்கார் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் கூட்டுறவுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் பின்னர் மேலும் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.


