கோலாலம்பூர், ஏப் 25- இந்தோனேசியாவில் உற்பத்தியாகும் செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. அந்நாட்டின் இந்த எதிர்பாராத மற்றும் ஆச்சரியமூட்டும் இந்த முடிவு மலேசியாவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியா அரசின் இந்த முடிவினால் அந்நாட்டிடம் செம்பனை எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த நாடுகளின் கவனம் இனி மலேசியா பக்கம் திரும்புவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக பப்ளிக் இண்வெஸ்மெண்ட் வங்கி கூறியது.
உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை வரும் 28 ஆம் தேதி தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
உலகின் முதன்மை செம்பனை எண்ணெய் உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தோனேசியா விளங்கி வருகிறது. இந்தோனேசியாவுக்கு அடுத்து மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தோனேசியா உலகின் செம்பனை ஏற்றுமதியில் 57 விழுக்காட்டு பங்களிப்பையும் தாவர எண்ணெய் ஏற்றுமதியில் 32 விழுக்காட்டு பங்களிப்பையும் வழங்குகிறது.
மலேசியாவின் செம்பனை தோட்ட நிறுவனங்களான கெந்திங் பிளாண்டேஷன், கே.எல்.கே., சைம் டார்பி பிளாண்டேஷன், டி.எஸ்.எச். போன்றவை இந்தோனேசியாவின் செம்பனை எண்ணெய் சந்தையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த வங்கி தெரிவித்தது.


