ஷா ஆலம், செப் 23- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியின் போது அமல்படுத்துவற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகிறது.
மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார்.
மக்களைவையில் இன்று சிம்பாங் ரெங்கம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரும்பாலான குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துதவற்கு சாத்தியம் உள்ளதாக என்று மஸ்லி கேள்வியெழுப்பிருந்தார்.
இந்த இலவச காலை உணவுத் திட்டம் கடந்தாண்டு ஜனவரியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பக்கத்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது.
முன்னோடித் திட்டமாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 முதல் நவம்பர் 22 வரை 6,303 மாணவர்களுக்கு இந்த காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.


