ஷா ஆலம், ஜூலை 3- கோவிட்-19 பரிசோதனைக் கருவியின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
தற்போது இந்த கருவிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை பொது மக்களுக்கு குறிப்பாக, குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் குடும்பத்தில் அதிக பிள்ளைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் வழி தெரியவந்துள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாகிட் கூறினார்.
அந்த பரிசோதனைக் கருவியின் விலை வெ.39.90 என்றத் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த விலையில் அந்த கருவியை வாங்குவது அனைவருக்கும் சாத்தியப்படாது. ஆகவே, வணிகர்களுக்கு இழப்பையும் பொதுமக்களுக்கு சுமையையும் ஏற்படுத்தாத வகையில் நியாயமான விலையை அந்த கருவிக்கு நிர்ணயிக்கும்படி உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.
அனைவரும் வாங்கும் வகையில் இந்த கருவி நியாயமான விலையில் விற்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே சமயம், போலியான கருவிகள் சந்தையில் ஊடுவருவாமலிருப்பதையும் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.


