ஷா ஆலம், ஜூலை 28- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழுவும் செகி வேல்யு ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து “ஏசான் கிட் செகி பிரெஷ் 2021“ எனும் திட்டத்தை தொடக்கியுள்ளன.
இந்த கூட்டு உதவித் திட்டத்தின் வாயிலாக 10,000 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்த கால்பந்து குழு தனது அக்கப்பக்கம் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
நோய்த் தொற்று காரணமாக வேலை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் மலாக்காவிலுள்ள செகி பிரெஷ் பல் நோக்கு கடைகள் வாயிலாக பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.
பல்வேறு உணவுப் பொருள்கள் அடங்கிய இந்த பொட்டலங்களை விநியோகிக்கும் பணி கையிருப்பு தீரும் வரை மேற்கொள்ளப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து குழு சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்ற கால்பந்து குழுவின் தலைவர் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷாவின் கோரிக்கையை ஏற்று இந்த உதவித் திட்டத்தை அது அமல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்புவோர் 012-5123240 என்ற தொலைபேசி எண்களில் செகி பிரெஷ் நிறுவனத்தின் சிறப்பு வாட்அப் புலனம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


