அம்பாங், ஜூலை 28- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக விவசாய பொருள்களின் விற்பனையில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு சிலாங்கூர் பரிவு விவசாய திட்டத்தின் வாயிலாக தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக சுமார் 400,000 வெள்ளி மதிப்புள்ள விவசாய பொருள்களை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் விவசாயிகளிடமிருந்து வாங்கியதோடு அவர்கள் தங்கள் விவசாயப் பொருள்களை விற்பனை செய்வதிலும் உதவி புரிந்ததாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த நடவடிக்கைகளின் வாயிலாக சந்தையில் விவசாயப் பொருள்கள் மிதமிஞ்சிக் காணப்படும் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. தொடக்கத்தில் தேக்கம் கண்டிருந்த விவசாயப் பொருகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. எனினும் சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டத்தின் வாயிலாக அந்த எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது என்றார் அவர்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள அம்பாங், மெர்பாத்தி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை உணவுப் பொருள்களை விநியோகித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஷா ஆலம் கான்கார்ட் ஹோட்டல் அருகே லோரி மூலம் விவசாய பொருள்களை விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு மாநிலம் முழுவதும் 12 நிரந்தர விற்பனை மையங்களும் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த மையங்களில் விற்பனை செய்யப்படும் விவசாய பொருள்கள் மற்ற இடங்களைக் காட்டிலும் 50 விழுக்காடு குறைவான விலையைக் கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 2ஆம் தேதி கூறியிருந்தார்.


