ஷா ஆலம், ஜூலை 20- செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் சிலாங்கூர் அரசின் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டம் ஹாஜ்ஜூப் பெருநாளுக்குப் பின்னர் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பிடமிருந்து தடுப்பூசி விநியோகம் சீராக கிடைக்கப் பெறுவதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசித் திட்டத்தை முறையாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பெருநாள் முடிந்தவுடன் பொது மக்களுக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை நாம் தீவிரமாக மேற்கொள்ளோம். இதன் தொடர்பில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதே சமயம், மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மீதும் உரிய கவனம் செலுத்தப்படும் . வரும் ஆகஸ்டு முதல் தேதிக்குள் மாநில மக்கள் அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
கோம்பாக், சமுத்ரா தீமோர், மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு நேற்று வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
செல்வேக்ஸ் எனப்படும சிலாங்கூர் அரசின் சொந்த தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் எனப்படும் தொழில்துறைக்கு 20 லட்சம் தடுப்பூசிகளும் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்திற்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.


