புத்ரா ஜெயா, ஜூலை 16- கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்போர் அனைவரும் அடுத்த மாத தொடக்கத்தில் குறைந்து ஒரு டோஸ் தடுப்பூசியையும் மாத இறுதிக்குள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெற்றிருப்பர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
லபுவானில் அடையப்பட்ட தடுப்பூசி இயக்கத்தின் வெற்றியை உதாரணம் காட்டிய அவர், அங்கு கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து இன்று 26 ஆக மட்டும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
லபுவானில் சுகாதார மற்றும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வார காலத்தில் 87 விழுக்காட்டு மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும் 52 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர். இதனை விளைவாக அங்கு கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார் அவர்.
பொது சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்படுவது மற்றும் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் வழி லபுவானில் டெல்டா மற்றும் பேட்டா வகை நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கையை தடுக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில், லபுவானில் ஒரே வார காலத்தில் 1,340 டெல்டா வகை நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் கட்டில்களின் பயன்பாடு 120 விழுக்காடு வரை அதிகரித்தது. எனினும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோரின் எண்ணிக்கை 55 விழுக்காடாக குறைந்துள்ளது என அவர் சொன்னார்.


