கிள்ளான், ஜூன் 4- கிள்ளான், லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செட்டி பாடாங் திடலின் பெயரை மாற்றும் கிள்ளான் நகராண்மைக்கழகத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிருந்த நிலையில் அங்கு புதிதாக நிறுவப்பட்ட பெயர் பலகை இன்று அகற்றப்பட்டது.
அந்த திடலின் நுழைவாயில் பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த Dataran Majlis Perbandaran Klang என்ற பெயர் பொறிக்கப்பட்ட அந்த பெயர்ப்பலகையை பணியாளர்கள் அகற்றுவதை காண முடிந்தது.
செட்டி பாடாங் என கால காலமாக அழைக்கப்பட்டு வந்த இந்த பகுதியை டத்தாரான் மஜ்லிஸ் பெர்பண்டாரான் கிள்ளான் என பெயர் மாற்றம் செய்ய நகராண்மைக்கழகம் முன்வைத்த ஆலோசனையை, ஆலய நிர்வாகம், கிள்ளான் இந்திய வர்த்தக சங்கம் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல் சந்தியாகு, பண்டமாரன் சட்டமன்ற உறுப்பினர் தோணி லியோங், கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஆகியோரும் கிள்ளான் நகராண்மைக்கழக உறுப்பினர்களும் நகராண்மைக்கழக தலைவரை சந்தித்து ஆட்சேபனையை தெரிவித்தனர்.
இது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதை அடுத்து முழுமைபெறாத பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. அதை தாம் பெரிதும் வரவேற்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்த செட்டி பாடாங் விவகாரம் தொடர்பில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


