கோம்பாக், மே 20- தாமான் டெம்ப்ளர் மற்றும் ரவாங் தொகுதிகளில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சுங்கை துவா, டேவான் ஸ்ரீசியாந்தான் மண்டபம் மற்றும் ரவாங், 17வது மைல் மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சுமார் 2,000 பேர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்திருந்தனர்.
இது தவிர்த்து அந்த பரிசோதனையில் பங்கேற்பதற்காக ஏறக்குறைய இதே அளவிலான பொதுமக்கள் நேரடியாக அவ்விரு மண்டபங்களுக்கும் வருகை புரிந்தனர்.
நாட்டின் நடப்பு கோவிட்-19 நிலவரங்களைக் கருத்தில் கொண்டு உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுவதாக தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமுது சானி ஹம்சான் கூறினார்.
வயது மற்றும் இன வேறுபாடின்றி அனைத்து நிலையிலான மக்களும் இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டுள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
நோய்த் தொற்றுக்கு எதிராக எடுக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் ஆண்டிஜென் (ஆர்.டிகே.-ஏஜி) கருவி பயன்படுத்தப்பட்டது. இக்கருவியின் மூலம் 30 நிமிடங்களில் நோய்த் தொற்றை கண்டறிய முடியும்.


