கோலா லம்பூர், பிப்ரவரி 26:
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய திட்டமான இலவச இருதய அறுவை சிகிச்சை திட்டத்தின் மூலம் சிறந்த சேவையை வழங்க முன் வந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இருதய அறுவை சிகிச்சையின் செலவு அதிகரிக்கும் இந்த தருணத்தில் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது.
" கடந்த 25 ஆண்டுகளில் ஐஜெஎன் சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளது. மலேசிய மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த விலையில் சேவையை தந்துள்ளது. இதன் மூலம், ஐஜெஎன் இருதய அறுவை சிகிச்சை பெறுபவர்களின் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. குறைந்த வருமானம் பெறும் இருதய நோயாளிகளுக்கு சிறந்த ஒரு தேர்வாக ஐஜெஎன் அமைகிறது என்பதில் துளியும் ஐயமில்லை," என்று சிலாங்கூர் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வரும் என்று உறுதியாக கூறினார். இந்த நிலையில் சிலாங்கூர் மாநில மக்களுக்கு குறிப்பாக பி40 மற்றும் எம்40 இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிறந்த ஒரு தேர்வாக அமையும் என்றார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 2018-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ரிம 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து 500 இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பயன் தரும் வகையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


