ஷா ஆலம், ஜூலை 24:
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க உதவி நிதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு வெற்றியை தேடித் தந்தது மட்டுமில்லாமல் சிலாங்கூரின் வறுமை நிலையை 0.2% குறைத்துள்ளது இமாலய சாதனையாகும் என்று சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் நிரந்தரக் குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் சட்ட மன்றத்தில் கூறினார். மேற்கண்ட புள்ளி விவரங்கள் மலேசியா புள்ளியல் துறை இலாகாவின் மூலம் பெற்றதாகவும், இது 2014-ஆம் ஆண்டிற்கான குடும்ப வருமான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று விவரித்தார்.
மேலும் கூறுகையில், 762,841 பேர் சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு நிரந்தரக் குழுவின் கீழ் உதவி பெற்றதாக கூறினார்.

" மாநில அரசாங்கத்திடம் மொத்த ஏழைக் குடுபங்களின் எண்ணிக்கை இல்லை. இது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மலேசிய புள்ளியல் துறை இலாகாவின் மூலமாக மட்டுமே பெற முடியும். நான் குறிப்பிட்ட எண்ணிக்கை தனது ஆட்சிக் குழுவின் கீழ் பயன் அடைந்தவர்களின் குடும்பங்கள் ஆகும். இது மற்ற ஆட்சிக் குழுவையோ அல்லது அரசாங்க நிறுவனங்கள் மூலமாக பெறப்பட்ட உதவிகள் சேர்க்கப் படவில்லை," என்று சுங்கை பூரோங் சட்ட மன்ற உறுப்பினர் சம்சூடின் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் 13வது சட்ட மன்ற கூட்டத் தொடரில் உரையாற்றிய போது கூறினார்.
கணபதி ராவ் மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம் மக்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் குடும்ப வருமானத்தை அதிகரிப்பு, சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் இருந்து மீழ்வது போன்றவை அடங்கும் என்றார்.
#கேஜிஎஸ்


