ஷா ஆலம், மே 25:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு மனமகிழ்வு அடைவதாக கூறினார். சிலாங்கூர் சுல்தான் பாஸ் கட்சியின் மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் எதிர் வரும் பொதுத் தேர்தல் வரை நிலை நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் அவர்களின் அதிகாரப்பூர்வ சிறப்பு கட்டளை, மக்களின் ஆழ்மனதை சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா புரிந்து வைத்து இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் அவர் மாநில அரசாங்கம் மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.
" மேன்மை தங்கிய சுல்தானின் கட்டளையை கண்டு பெருமிதம் கொள்கிறேன். மக்களின் நல்வாழ்விற்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட மன்னர் தாம் என்று மேன்மை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நிருபித்து உள்ளார்," என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்கள் எப்போது மூன்று பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நிலையை சுல்தானிடம் கலந்து பேச இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது," நான் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களை அதிகாரப்பூர்வமாக சந்திப்பேன். இந்த பாரம்பரிய நிகழ்வு புதன்கிழமை நடக்கும் ஆட்சிக் குழு கூட்டத்திற்கு முன்பு விவாதிக்கும் விஷயங்கள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்," என்று அஸ்மின் அலி கூறினார்.
சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்க செயலாளர், டத்தோ முகமட் மூனிர் பானி வெளியிட்ட அறிக்கையில் மூன்று பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் நிலை நிறுத்தப் பட வேண்டும் என்று கட்டளை இட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


